செய்திகள்

பேக்கரி கடை ஊழியரை தாக்கி ரூ.17 ஆயிரம் பணம் பறிப்பு

Published On 2019-06-15 09:50 GMT   |   Update On 2019-06-15 09:50 GMT
வெள்ளிச்சந்தை அருகே பேக்கரி கடை ஊழியரை தாக்கி ரூ.17 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே உள்ள சடையால்புதூரைச் சேர்ந்தவர் டைட்டஸ் பீஸ்மாஸ் (வயது 45). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வருகிறார்.

இரவு வேலை முடிந்ததும் இவர் தான் கடையை பூட்டி விட்டு செல்வார். போகும்போது கடையில் விற்பனையாகும் பணத்தை அவர் எடுத்துச் செல்வது வழக்கம். காலையில் பணிக்கு வந்ததும் அந்த பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைப்பார்.

அதேபோல நேற்று இரவு கடையை பூட்டி விட்டு விற்பனையான ரூ.17 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். மோட்டார்சைக்கிளில் அவர் சடையால்புதூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பெருஞ்செல்வவிளை பகுதியில் சென்றபோது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்ம நபர்கள் 3 பேர் நின்றனர்.

அவர்கள் டைட்டஸ் பீஸ்மாஸை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.17 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் டைட்டஸ் பீஸ்மாஸ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், ஏட்டு ராமஜெயம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

Similar News