தமிழக போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி:
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள கரை இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அசோக். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இடைக்கமிட்டி உறுப்பினரான இவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இவரது கொலைக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை கைது செய்யாத தமிழக போலீசாரை கண்டித்து இன்று புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாரம் அவ்வை திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் பெருமாள், நிர்வாகிகள் முருகன், நிலவழகன், தமிழ்செல்வன், சத்தியா, சீனுவாசன், நடராஜன், மதிவாணன், அய்யப்பன், அன்புமணி உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.