செய்திகள்

பெண்கள் இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் - ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்

Published On 2019-06-14 20:56 GMT   |   Update On 2019-06-14 20:56 GMT
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், கிரேஸ்பானு கணேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவரான திருநங்கைகள், திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இதற்கான திட்டத்தை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக நலத்துறை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருநங்கைகள், திருநம்பிகளை 3-ம் இனத்தவராக அங்கீகரித்து அவர்களுக்கு அடையாள அட்டை, குடும்பநல அட்டை, வாக்காளர் அட்டை, சுகாதார காப்பீட்டு அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் 2018-ம் ஆண்டு வரை 515 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 40 வயதை கடந்த 3-ம் பாலினத்தவருக்கு ஆண்டுக்கு ரூ.1.20 கோடி வழங்கப்படுகிறது.

2017-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, சாதி சான்றிதழ் இல்லாத 3-ம் பாலினத்தவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவார்கள். தன்னை பெண்ணாக அறிவித்துள்ள திருநங்கைகள், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும், 70 சதவீத பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழும் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு சுயவேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க வழங்கப்பட்ட ரூ.20 ஆயிரத்தை கடந்த ஆண்டு ரூ.50 ஆயிரமாக உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 3-ம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்
Tags:    

Similar News