உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
உடன்குடி:
நெல்லை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் நாராயணன்(வயது 77). பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் முரளி. குலசேகரன்பட்டினத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். அதனால் நாராயணன் தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
நேற்று காலை குலசேகரன் பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம்(63) என்பவருடன் நாராயணன் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.
பின்னர் மாலை இருவரும் குலசேகரன்பட்டினம் திரும்பிக் கொண்டிருந்தனர். உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நாராயணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.காயமடைந்த ஆறுமுகத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குலசேகரன் பட்டினம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜபால் விசாரணை நடத்தி வருகிறார்.