செய்திகள்

குண்டும் குழியுமான சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்- விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2019-06-13 11:51 GMT   |   Update On 2019-06-13 11:51 GMT
விளவங்கோடு தொகுதியில் குண்டும் குழியுமான சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
நாகர்கோவில்:

விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமாக சேதமுற்றுள்ளன. குழித்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகள் எளிதில் பழுதடைந்து விடுகின்றன.

தாழ்வான இடங்களில் சாலைகளின் குறுக்கே மழை நீர் வெள்ளம் போல் சீறி பாய்வதால் சாலைகள் பழுதாகி விடுகின்றன. எனவே சிறு பாலங்களும், சாலை ஓரங்களில் வடிகால் வசதியுடனும் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

குமரி மாவட்டம் கேரள மாநிலத்தில் உள்ளது போன்று மழை அதிகம் பெய்யும் பகுதி என்பதால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலைகள் செப்பனிட வேண்டும். ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலை செப்பனிடுதல் என்ற விதியை தளர்வு செய்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகள் சீர் செய்யப்பட அரசாணை வெளியிட வேண்டும்.

சாலை ஓரங்களில் பாறை பொடி ஜல்லி கலந்த கலவை கொட்டி சாலை ஓரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சாலைகள் திண்ணமாகவும் தார் கலவை அதிகம் கலந்து உறுதியுடனும் நீடித்த உழைப்புடனும் சாலைகளை சீரமைக்கவும் புதிய பாலங்கள் கட்டவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News