செய்திகள்

தூசி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை பலி

Published On 2019-06-11 11:59 GMT   |   Update On 2019-06-11 11:59 GMT
தூசி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வெம்பாக்கம்:

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூரை சேர்ந்தவர் விநாயகம். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி இவர்களுக்கு அரிகேஷ் என்ற (2 வயது) ஆண் குழந்தை உள்ளது.

லட்சுமி தூசி நத்தபள்ளம் பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு தனது கணவன் மற்றும் குழந்தையுடன் நேற்று முன்தினம் புறப்பட்டு வந்தார்.

அங்கு குழந்தையை வீட்டில் விளையாட விட்டு விட்டு லட்சுமி வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது விளையாடி கொண்டிருந்த அரிகேஷ் வீட்டிற்கு வெளியே இருந்த 6 அடி தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

அதில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் அரிகேஷ் தண்ணீரில் மூச்சு திணறி தத்தளித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த லட்சுமி குழந்தை தண்ணீர் தொட்டியில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

உறவினர்கள் குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அரிகேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தான்.

இதுகுறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News