செய்திகள்

களியக்காவிளையில் 150 மது பாட்டில் பதுக்கி வைத்த வாலிபர் கைது

Published On 2019-06-10 12:04 GMT   |   Update On 2019-06-10 12:04 GMT
களியக்காவிளையில் 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மேலும் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் அனுமதியின்றி மது விற்பவர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

நேற்று களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அயக்கோட்டுவிளை பகுதியில் வரும் போது அங்கு சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற் கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் மீளச்சல் பகுதியை சேர்ந்த ஜெயபிரதாப் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேப்போல் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் ரோந்துவந்தனர். அவர்கள் வசந்தம் நகரில் வரும் போது அங்கு அனுமதியின்றி மது விற்றதாக செல்வகுமார் (44), தாணுமூர்த்தி (35) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது லட்சுமிபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்றதாக தங்கம்மாள் (66) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News