செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் - கலெக்டர் ராஜாமணி பேச்சு

Published On 2019-06-06 18:11 GMT   |   Update On 2019-06-06 18:11 GMT
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.
கோவை:

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா கோவை ரேஸ்கோர்சில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் அருகே நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி் வைத்தார்.

பின்னர் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் பலருக்கு கலெக்டர் ராஜாமணி மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

மக்கள் தொகை பெருக்கம், தட்பவெட்ப நிலை மாற்றம், நவீன வாழ்க்கை முறை ஆகிய காரணங்களால் சுற்றுச்சூழலில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்ட வேண்டும்.

ரோட்டில் குப்பைகளை தூக்கி வீசுவது, எச்சில் துப்புவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும். நம்மிடம் இருந்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் குழந்தைகளுக்கு நாம் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் மணிவண்ணன், அம்பாள் ஆட்டோ குழுமங்களின் தலைவர் அசோகன் முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News