காங்கயத்தில் மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை விபத்தில் பலி
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் நல்லசேனாபதி (வயது 55). இவர் காங்கயம் கோவை ரோட்டில் எலட்ரிக்கடை நடத்தி வந்தார்.
இவரது மனைவி பரிமளம் (47). இவர் காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.
நேற்று வெள்ள கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு திருமண அழைப்பிழை கொடுக்க காரில் வந்தனர். திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு காங்கயதுக்கு புறப்பட்டனர்.
கார் அங்குள்ள ஓலப் பாளையத்தில் வந்தபோது அந்த வழியே லாரி வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் காரும், லாரியும் மோதின. இதில் படுகாயம் அடைந்த நல்லசேனாபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஆசிரியை பரிமளத்தை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நல்லசேனாபதியின் உடல் இன்று காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.