செய்திகள்

குடவாசலில் இளம்பெண் சாவில் மர்மம் - போலீசில் புகார்

Published On 2019-06-04 08:47 GMT   |   Update On 2019-06-04 08:47 GMT
குடவாசலில் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவரது மனைவி வினோதினி (27). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. குவைத்தில் வேலை பார்த்து வந்த வினோத் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார்.

இதைத்தொடர்ந்து வினோத் குமார் குடும்பத்தினருடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். இதைத் தொடர்ந்து வினோதினி சமையல் அறைக்கு சென்று பால் காய்ச்சினார். அப்போது கியாஸ் கசிவு காரணமாக அவர் மீது தீப்பற்றியது. இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக வினோதினியின் அண்ணன் விசுவநாதன், குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதில் தனது தங்கை வினோதினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மாமனார் குறை கூறி வந்ததால் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் எனவே வினோதினி சாவில் மர்மம் இருப்பதாகவும் அதுதொடர்பாக விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவர் கொடுத்த புகாரின்பேரில் டி.எஸ்.பி. முத்தமிழ்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குடவாசலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News