செய்திகள்

2-வது திருமணத்துக்காக மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது

Published On 2019-06-02 14:44 GMT   |   Update On 2019-06-02 14:44 GMT
திண்டுக்கல் அருகே 2-வது திருமணத்துக்காக மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னிவாடி:

திண்டுக்கல் அருகே தருமத்துப்பட்டி செவலக் கரையான் பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32) இவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவரது பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

ஆனால் பிரபாகரன் மைனர் பெண்ணை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். எனவே அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு கடத்திச் சென்றுள்ளார். மகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் அசோக் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தார். சென்னையில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீசார் கன்னிவாடி அழைத்து வந்தனர். போலீஸ் நிலையத்தில் இளம் பெண் பிரபாகரனுடன் வாழ விருப்பம் உள்ளதாக கூறியுள்ளார். மைனர் பெண் என்பதால் அவரை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரபாகரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News