செய்திகள்

பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2019-06-01 17:09 GMT   |   Update On 2019-06-01 17:09 GMT
பேரளியில் குறைந்தழுத்த மின்சாரம் வினியோகிக்கப்படுவதை கண்டித்து பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேரளி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக குறைந்தழுத்த மின்சாரமே வினியோகிக்கப்படுகிறதாம். மேலும் கோடை காலங்களில் மிகவும் குறைந்தழுத்த மின்சாரமே வினியோகிக்கப்படுவதால், மின் மோட்டார் மற்றும் வீட்டு உபயோக மின் சாதன பொருட்களை இயக்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் பேரளியில் சீரான மின்சாரம் வினியோகிக்க, மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்க வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் பலமுறை பெரம்பலூர் மின்பகிர்மான கோட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பஸ்சை சிறை பிடித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பேரளி கிராம பொதுமக்கள் நேற்று காலை திரண்டு வந்து பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் எங்கள் பகுதியில் உடனடியாக மின்மாற்றி அமைத்து, சீரான மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கருப்பையா அனைவரையும் அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இன்னும் 10 நாட்களில் மின்மாற்றி அமைத்து, சீரான மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்ததின் பேரில், பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். 10 நாட்களில் மின்மாற்றி அமைக்கவில்லையென்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News