செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்
மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததால் அவர் பலத்த காயமடைந்தார்.
ராயபுரம்:
வியாசர்பாடியை சேர்ந்தவர் சேர்மகனி (40). தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று மாலை 5.30 மணிக்கு சேர்மகனி அவரது மோட்டார் சைக்கிளில் தண்டையார்பேட்டைக்கு புறப்பட்டார். அங்குள்ள வைத்தியநாதர் பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் சேர்மகனியின் கழுத்தை சுற்றியது. இதில் நிலை தடுமாறிய சேர்மகனி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.
மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தூக்கிச் சென்று அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கு மாஞ்சா நூலில் பட்டம் விட்டவரை போலீசார் தேடி வருகிறார்கள்.