பெரியநாயக்கன்பாளையம் அருகே கார் மோதி பெண் பலி
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ள பிளிச்சி பெட்டதாபுரம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 50). இவரது சொந்த ஊர் பொள்ளாச்சியை அடுத்த தொழில்பேட்டையாகும். கணவர் இறந்ததையடுத்து இங்கு வந்து வசித்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை.
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஒட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியவில் வீட்டில் இருந்து மளிகை கடைக்கு செல்ல மேட்டுப்பாளையம் சாலையை கடந்துள்ளார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.