பல்லடம் அருகே சமையல் செய்த மாணவி உடல் கருகி பலி
பல்லடம்:
பல்லடம் கரைப்புதூர் அவரப்பாளையத்தில் உள்ளது மீனாம்பிகை நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் விஜய். டெய்லர். இவரது மனைவி ஆனந்தி. இவர்களது மகள் சன்மதி (வயது 17). பிளஸ்-2 தேர்ச்சி பெற்று மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆனந்தி சமையல் செய்தார். திடீரென கியாஸ் தீர்ந்து விட்டது. இதனையடுத்து மண்எண்ணை அடுப்பை பற்ற வைக்குமாறு மகளிடம் ஆனந்தி கூறினார்.
இதனையடுத்து சன்மதி மண்எண்ணை அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக சன்மதியின் ஆடை மீது தீ பற்றியது. தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த சன்மதி அலறிசத்தம்போட்டார். ஆனந்தி ஓடி வந்து தீயை அணைத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சன்மதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சன்மதி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.