உக்கடம் பஸ் நிலையத்தில் காய்கறி வியாபாரியிடம் பணம் திருட்டு
கோவை:
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குந்தா காலனியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). காய்கறி வியாபாரி. இவர் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு காய்கறி ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று தேவராஜ் பணம் வசூல் செய்வதற்காக கேரள மாநிலத்துக்கு சென்றார். வசூலை முடித்துக்கொண்டு இரவு கோவைக்கு பஸ்சில் திரும்பினார்.
பஸ் உக்கடம் பஸ் நிலையம் வந்ததும் திடீரென தேவராஜீக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஓய்வு எடுக்க நினைத்த அவர் தான் வசூல் செய்து கொண்டு வந்த ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை கைப்பையில் அருகே வைத்து விட்டு படுத்து இருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர் தேவராஜ் வைத்து இருந்த கைப்பையை பணத்துடன் திருடிச் சென்றார்.நள்ளிரவு கண் விழித்த தேவராஜ் பணப்பை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.