செய்திகள்

மதுரை ஜெயிலில் போராட்டம் - கல்வீசி தாக்கிய 9 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

Published On 2019-05-04 10:12 GMT   |   Update On 2019-05-04 10:12 GMT
மதுரை சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டு போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 9 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை:

மதுரை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 2500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

சிறையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், செல்போன்கள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் சில கைதிகளின் அறையில் கடந்த 23-ந் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மற்ற கைதிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறை வளாகத்தில் உள்ள காம்பவுண்டு சுவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததுடன் கற்கள் மற்றும் ஓடுகளை எடுத்து போலீசார் மீது வீசினர். ரோட்டு பகுதியிலும் கற்கள் வீசப்பட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்து கரிமேடு போலீசார் 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சில கைதிகளை வேறு சிறைக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரகளையில் ஈடுபட்ட கைதிகள் வினோத், சுகுமார், கண்ணன், ரவீந்திரன் உள்ளிட்ட 9 பேர் திருச்சி, கோவை, வேலூர், கடலூர் சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மாற்றம் செய்யப்பட்ட 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் மாற்றப்பட்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News