தேனியில் வங்கி மேலாளர் என கூறி பெண்ணிடம் பணம் மோசடி
தேனி:
பெரியகுளம் அருகே வடுகபட்டி கீழகாமக்கா பட்டியைச் சேர்ந்தவர் காந்தியம்மாள் (வயது 59). இவர் இன்சூரன்ஸ் பணம் கட்டுவதற்காக பெரியகுளம் எல்.ஐ.சி. அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
அந்த பணத்தை தேனி ஸ்டேட் பேங்க் கிளையில் கட்டுமாறு அங்கிருந்தவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் காந்தியம்மாளிடம் தான் ஸ்டேட் பேங்க் மானேஜர் என கூறி பின்னர் பணத்தை தேனி வங்கியில் கட்டுமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து காந்தியம்மாளுடன் தேனிக்கு சென்ற அந்த மர்ம நபர் சான்றிதழ்களை நகல் எடுத்து வர கூறியுள்ளார். அப்போது இன்சூரன்ஸ் தொகை ரூ.16 ஆயிரத்தை காந்தியம்மாள் அவரிடம் கொடுத்து சென்றுள்ளார்.
கடைக்கு சென்று சான்றிதழ்களை நகல் எடுத்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது அந்த நபர் மாயமாகியுள்ளார். இது குறித்து வங்கியில் விசாரித்த போது அந்த நபர் போலி என தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த காந்தியம்மாள் தேனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.