செய்திகள்

அருமனை அருகே விபத்து - 2 பேர் பலி

Published On 2019-04-16 09:55 GMT   |   Update On 2019-04-16 09:55 GMT
அருமனை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருமனை:

அருமனை அருகே உள்ள ஆறுகாணி பகுதியைச் சேர்ந்தவர் பாலேஸ். அதே பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்யு என்ற உன்னிக்குட்டன் (வயது 22). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள்.

இன்று காலை ஆறுகாணியில் இருந்து மோட்டார் சைக்கிளில் களியக்காவிளை நோக்கி கட்டிட பணிக்காக பாலேசும், உன்னிக்குட்டனும் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாலேஸ் ஓட்டிச் சென்றார். கடையாலுமூடு பகுதியில் அவர்கள் சென்றபோது கட்டாவிளையைச் சேர்ந்த ஜெகதீஷ் (35) என்ற நண்பர் ஒருவர் அவர்களது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டார்.

அருமனை அருகே குஞ்சாலிவிளை பகுதியில் காலை 7.45 மணி அளவில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதி நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தை பார்த்ததும் அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானது தெரியவந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலேசையும், உன்னிக்குட்டனையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர்கள் 2 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் வழியிலேயே உன்னிக்குட்டன் பரிதாபமாக இறந்து விட்டார். பாலேஸ் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News