கோவை- சேலம் இடையே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 5½ பவுன் நகை அபேஸ்
கோவை:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் காமராஜ்.
இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பழக்கடையில் கேஷியராக உள்ளார். இவரது மனைவி சிவகாமி (வயது 48).
இவர் சேலத்தில் நடக்கும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டார்.
கோவை ரெயில் நிலையத்தில் ஆலபுழா- மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரெயிலில் ஏறினார். கைப்பையில் நெக்லஸ். மோதிரம், தங்க நாணயம் என 5½ பவுன் மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 வைத்திருந்தார்.
சேலம் ரெயில் நிலையத்தில் இறங்கி பேக்கை சோதனை செய்தபோது அதில் இருந்த கைப்பையை காணவில்லை. மர்ம நபர்கள் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து சிவகாமி அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கோவை ரெயில் நிலைய போலீசில் புகார் செய்தார்.
கோவை ரெயில் நிலைய போலீசார் இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.