செய்திகள்

அய்யம்பேட்டை அருகே தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது

Published On 2019-04-05 11:01 GMT   |   Update On 2019-04-05 11:01 GMT
அய்யம்பேட்டை அருகே தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே வடக்கு மாங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 21). மாத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 20) இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் சென்றுவிட்டு மீண்டும் அய்யம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி வந்தபோது முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும், தனியார் பஸ் டிரைவர் விக்னேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து சண்முகவேலும், பிரவீனும் மாத்தூரில் உள்ள தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தனியார் பஸ் மாத்தூர் அருகே வந்தபோது சண்முகவேல், பிரவீன் ஆகியோருடன் மாத்தூரைச் சேர்ந்த ஆபிரகாம், அவருடைய நண்பர்களும் சேர்ந்து கொண்டு தனியார் பஸ்சை நிறுத்தி முன்புற கண்ணாடியை உடைத்தனர்.

மேலும் டிரைவர் விக்னேசையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த சண்முகவேல், பிரவீன், ஆபிரகாம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News