செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்

Published On 2019-03-22 08:28 GMT   |   Update On 2019-03-22 08:28 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அலசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்.

இவரது மகன் ஸ்ரீராம் (வயது30). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்.

நேற்று இரவு ஸ்ரீராம் தனது தோட்டத்திற்கு வழக்கம்போல் காவலுக்கு சென்றார். அப்போது இரவு சுமார் 12 மணியளவில் 5 யானைகள் கூட்டமாக அங்கு வந்துள்ளது.

யானைகள் வருவதை கண்டு டார்ச் விளக்கை ஆன் செய்தார். அப்போது வெளிச்சத்தை கண்டு பயந்துபோன ஒரு யானை வேகமாக வந்து ஸ்ரீராமை நோக்கி வந்தது. யானை வருவதை கண்டு அவர் தப்பி ஓட முயற்சித்தார். உடனே யானை அவரை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் கை, கால், விலா எலும்பு நொறுங்கியதால் வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த ஸ்ரீராமை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வன சரகர் வெங்கடாசலம் மற்றும் வனகாப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஸ்ரீராமுக்கு ஆறுதல் கூறினர்.

இந்த பகுதியில் தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகுந்து பொது மக்களை தாக்குவதால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.

தற்போது இந்த பகுதியில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை வனத்துறையினர் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News