செய்திகள்

வலங்கைமான் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை

Published On 2019-03-16 10:37 GMT   |   Update On 2019-03-16 10:37 GMT
வலங்கைமான் அருகே படிக்காததை தந்தை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நரிக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் யோகேஷ் (வயது 17). இவர் வெலப்பகோவிலில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி ஆவூர்அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 9-ந் தேதி அவர் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில் அங்கு சென்ற சேகர், சரியாக படிக்காமல் ஊர் சுற்றி திரிவதாக கூறி யோகேசை கண்டித்துள்ளார்.

இதில் மனமுடைந்த யோகேஷ் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்காததை தந்தை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு திறமைகள் வாய்ந்த மாணவர்கள் படித்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று கருதி அவர்களை கட்டாயப்படுத்துவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம். படிப்பு வராத மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று தன்னம்பிக்கை அளித்தால் மாணவ-மாணவிகள் உயிரிழப்பை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News