செய்திகள்
அருப்புக்கோட்டை அருகே வியாபாரி வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
வியாபாரி வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி 22 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
விருதுநகர்:
அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் ராமராஜ், வியாபாரி. இவரது மனைவி பத்மாவதி (வயது 66). இவர்களது மருமகள் சுபாசினி (33). நேற்று இரவு ராமராஜ் வியாபாரம் விஷயமாக வெளியே சென்றிருந்தார்.
பத்மாவதியும், சுபாஷினியும் வீட்டில் இருந்தனர். அப்போது 2 பேர் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் கத்தியை காட்டி 2 பெண்களையும் மிரட்டினர்.
பின்னர் வீட்டில் இருந்த 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.