கோரிமேட்டில் மனைவியுடன் தகராறில் பூ வியாபாரி தற்கொலை
புதுச்சேரி:
கோரிமேடு ஆனந்தா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவர் அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் பூக்கடை வைத்து பூ வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.
அதுபோல் நேற்று மாலை பூ வியாபாரம் முடிந்ததும் ஆறுமுகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவி மாரியம்மாளிடம் தகராறு செய்தார்.
மேலும் மாரியம்மாளை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் போதை தெளிந்ததும் மனைவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
ஆனாலும் மனைவியை தாக்கியதை நினைத்து ஆறுமுகம் மனமுடைந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்க டேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.