சபாநாயகர், கொறடா கையை வெட்டுவோம் என்பதா?: தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கு ராஜேந்திர பாலாஜி கண்டனம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வும், டி.டி.வி. தினகரன் ஆதரவாளருமான ரத்தின சபாபதி கலந்து கொண்டார். அவர் பேசும்போது 18 பேர் பதவியை பறித்துவிட்டு தற்போது எங்களை மிரட்டுகின்றனர். கொறடா தாமரை ராஜேந்திரன் என்னிடம் வந்து முதல்வர், துணை முதல்வர் உங்கள் மேல் கோபமாக உள்ளனர். நோட்டீஸ் விட கூறுகின்றனர். சபாநாயகரிடமும் நோட்டீஸ் விட கூறுகின்றனர் என்றார்.
அதற்கு நான் பதில் அளிக்கும்போது ஏற்கனவே 18 பேருக்கு நோட்டீஸ் அளிக்கும்போது நாங்கள் ஏமாந்துவிட்டோம். இனி ஏமாறமாட்டோம். நீங்கள் என்னை நீக்கப்போகும் கையெழுத்துதான் கடைசி கையெழுத்து. அதன்பிறகு கையெழுத்து போட உங்கள் 2 பேருக்கும் கை இருக்காது என கூறினேன் என்றார்.
ரத்தினசபாபதியின் இந்த பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது:- 'அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி சபாநாயகர், கொறடா கையை வெட்டுவேன் என்று கூறியிருக்கிறார். அவரது இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்கள் பயப்படமாட்டோம். எத்தனை பேர்களின் கையை ரத்தினசபாபதி வெட்டிவிடுவார்? பேசும்போது கவனமாக பேச வேண்டும். அ.தி.மு.க.வினர் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என்றார்'. #ADMK #RajendraBalaji