செய்திகள்

மதுரை அருகே பேய் பிடித்ததாக கூறி பெண்ணுக்கு அடி-உதை: கணவர் உள்பட 5 பேர் கைது

Published On 2019-03-01 10:33 GMT   |   Update On 2019-03-01 10:33 GMT
பேய் பிடித்ததாக கூறி பெண்ணை அடித்து உதைத்ததாக கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை:

மதுரை நரசிங்கம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி அம்மாள் (வயது 24). இவரது கணவர் விஜயகுமார் (32). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

முத்துப்பாண்டி அம்மாள் தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

அப்போது உனக்கு பேய் பிடித்திருக்கிறது, அதற்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று விஜய குமார், மனைவியிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சக நண்பர்கள் சேவுகபாண்டி (37), சுப்பிரமணி (31), கனகபால் (34) ஆகியோருடன் சேர்ந்து விஜயகுமார் மனைவி முத்துப்பாண்டி அம்மாளை அப்பன்திருப்பதியில் வசிக்கும் சாமியாடி செல்வம் (59) என்பவரிடம் கூட்டிச் சென்று உள்ளார். அப்போது முத்துப்பாண்டி அம்மாளுக்கு சாட்டியடி விழுந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடிய முத்துப்பாண்டி அம்மாள் அப்பன் திருப்பதி போலீ சில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப் பதிவு செய்து விஜயகுமார் (32), சேவுகபாண்டி (37), சுப்பிரமணி (31), கனகபால் (34), செல்வம் (59) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News