கோவை:
கோவை புலியகுளம் சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் லியோ மார்டின் (வயது 29). இவர் மீது கொலை, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.
நேற்று இரவு லியோ மார்டின் அலமேலுமங்கா லே-அவுட் அருகே கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக லியோ மார்டினை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று இரவு மது போதையில் இருந்த லியோ மார்டின் புலியகுளம் துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்த தருண் என்கிற இன்பிரண்ட்ராஜன் (19) என்பவரது வீட்டுக்கு சென்றார்.
அங்கு தருண் மற்றும் கொண்டசாமி கோவில் வீதியை சேர்ந்த விக்கு என்கிற சண்முகம் (19) ஆகியோரிடம் கஞ்சா கேட்டார். அவர்கள் கொடுக்க மறுத்து இங்கு இருந்து செல்லுமாறும் கூறி உள்ளனர்.
ஆனால் லியோ மார்டின் செல்ல மறுத்து 2 பேரையும் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து கத்தியால் லியோ மார்டினின் வயிறு, மார்பு பகுதிகளில் சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் அவர் இறந்தது தெரியவந்தது.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடியை குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான தருண், சண்முகம் ஆகியோரை தேடி வருகிறார்கள்.