ஸ்டைலாக முடிவெட்டியதை கேலி செய்ததால் மாணவன் தற்கொலை
விருதுநகர்:
விருதுநகர் ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் முனீசுவரன் (வயது 14). இவர் மேல சின்னயாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் முனீசுவரன் பள்ளிக்குச் செல்லவில்லை.
நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். அப்போது ஸ்டைலாக முடிவெட்டியிருந்தார். இதனை நண்பர்கள் கேலி செய்தனர்.
ஸ்டைலாக முடிவெட்டியதால் பாராட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற முனீசுவரனுக்கு சக மாணவர்களின் கேலி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.
மாலையில் வீடு திரும்பிய பின்னரும், சோகமாகவே இருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. தனியாக இருந்த முனீசுவரன், உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் கருகிய முனீசுவரனை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி பெற்றதும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு முனீசுவரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீசில், அய்யனார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.