சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக வில்லியனூர் துணை தாசில்தார் நித்யானந்தத்துக்கு தகவல் வந்தது.
இதையடுத்து துணை தாசில்தார் நித்யானந்தம் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியவர்கள் துணை தாசில்தாரை பார்த்ததும் 4 மாட்டு வண்டிகளையும் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்துஅந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாட்டு வண்டிகள் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் வில்லியனூர் போலீசார் கூடப்பாக்கம் ரோடு மூர்த்தி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சங்கராபரணி ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கணுவாப்பேட்டையை சேர்ந்த பழனி (வயது 32) மற்றும் தேவராஜ் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.