செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

Published On 2019-01-23 11:52 GMT   |   Update On 2019-01-23 11:52 GMT
மணவாளக்குறிச்சி அருகே கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

மணவாளக்குறிச்சி அருகே கல்படி கழுவன்தட்டு விளை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உஷா (வயது 55).

இவர் சம்பவத்தன்று மாலையில் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் காட்டுகுளத்தின் கரை அருகே நடந்து வரும்போது அவருக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் உஷாவின் அருகே வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி உஷாவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார்.

இதில் சுதாரித்துக் கொண்ட உஷா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்.. என கூச்சலிட்டு அலறினார். ஆள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால் யாரும் வரவில்லை. மோட்டார் சைக்கிளில் வந்த அந்த மர்ம நபர் உஷாவின் கையை தட்டிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

இதுகுறித்து உஷா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு கொள்ளையன் குறித்த தடயங்களை சேகரித்தனர்.

உஷா கூறிய அடையாளங்களை வைத்து அந்த பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News