செய்திகள்

மோடி வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்- எச்.ராஜா

Published On 2019-01-17 05:35 GMT   |   Update On 2019-01-17 05:35 GMT
பிரதமர் மோடி வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். #BJP #PMModi #HRaja
பழனி:

பழனியில் பா.ஜனதா சார்பில் பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு முழு முயற்சி எடுத்தது. ஆனால் தமிழக அரசு இத்திட்டத்தை தாமதப்படுத்தி வந்தது. தற்போது மத்திய அரசு மீண்டும் முழு முயற்சி எடுத்து பிரதமர் மோடி மதுரையில் இதற்கான திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். மோடி வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.


தமிழக கோவில்களில் பக்தர்களின் நலனை கருதி அன்னதான திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது பழனி முருகன் கோவிலை பஞ்சாமிர்தம் விற்கும் வணிக மையமாக மாற்றியுள்ளனர்.

பசுஞ்சாணத்தை பயன்படுத்தி விபூதி தயாரிப்பதில்லை. எனவே இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும். ஊழலை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு எந்த அறுகதையும் கிடையாது. வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியே அமோக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #PMModi #HRaja
Tags:    

Similar News