செய்திகள்

வந்தவாசி அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

Published On 2019-01-08 10:27 GMT   |   Update On 2019-01-08 10:27 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:

வந்தவாசி அடுத்த மழுவங்கரனை கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது56) விவசாயி. இவரது மனைவி முனியம்மாள் (50). ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று முனியம்மாள் 100 நாள் வேலை திட்டத்திற்காக அங்குள்ள ஏரிப்பகுதிக்கு காலையிலேயே சென்றுள்ளார். காலை 11 மணியளவில் கன்னியப்பன் மாட்டை விவசாய நிலத்தில் கட்டிவர சென்றுள்ளார். சுமார் 12 மணியளவில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டை பூட்டி மறைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த சாவி அங்கேயே இருந்துள்ளது. வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ பூட்டு உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக் கிடந்தது. சந்தேகமடைந்த கன்னியப்பன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகை ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம ஆசாமிகள் ஒரு மணி நேரத்தில் திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கன்னியப்பன் கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News