செய்திகள்

காரிமங்கலம் அருகே லாரி டிரைவர் அடித்து கொலையா? - போலீசார் விசாரணை

Published On 2018-12-25 06:46 GMT   |   Update On 2018-12-25 06:46 GMT
காரிமங்கலம் அருகே லாரி டிரைவர் அடித்து கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள பீரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அனிபீரன் (வயது 35). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகம்மாள் (30). இவர்களுக்கு 12 வயதில் அர்ச்சனா என்ற மகளும், 5 வயதில் அன்பு மூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.

அனிபீரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை அனிபீரன் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி முருகம்மாள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் உடலை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கிணற்றில் இருந்து கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.

அப்போது பிணமாக கிடந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த மாயமான அனிபீரன் என்பது தெரியவந்தது. கிணற்றின் அருகில் அனிபீரனை அடித்து கொலை செய்ததற்கான ரத்த காயம் இருந்துள்ளது.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இத தொடர்பாக காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்கு பதிவு செய்து கிணற்றில் பிணமாக கிடந்த அனிபீரனை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது அவருக்கு வேறு எதுவும் முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News