செய்திகள்

கருங்கல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2018-12-20 12:27 GMT   |   Update On 2018-12-20 12:27 GMT
கருங்கல், புதுக்கடை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கருங்கல்:

கருங்கல், புதுக்கடை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன.

கருங்கல் மங்கலக்குன்று பகுதியில் கடந்த வாரம் ஒரு கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் நடந்துச் சென்ற மூதாட்டி ஒருவரிடம் நகை பறிப்பு நடந்தது. மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் மூதாட்டியின் நகையை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதிலும் குற்றவாளிகள் அடையாளம் தெரியாமல் இருந்தனர்.

நகை, பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது போல காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் வீட்டில் நின்ற சந்தன மரமும் வெட்டி கடத்தப்பட்டது.

கருங்கல், புதுக்கடை பகுதிகளில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்கள் போலீசாரை அதிர வைத்தன.

இதையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜான்போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் புதுக்கடை, கருங்கல் பகுதியில் மாறுவேடத்தில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேரங்களிலும் வாகன சோதனை, ரோந்து பணியினையும் மேற்கொண்டனர்.

தனிப்படை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று புதுக்கடை வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிரன்குமார் என்ற வாலிபர் பிடிபட்டார்.

இவரிடம் நடத்திய விசாரணையில் கிரன்குமாரும், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சால்வின் என்பவரும் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கிரன்குமார், சால்வின் இருவரையும் கருங்கல் போலீசில் ஒப்படைத்தனர்.கருங்கல் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, வாலிபர்கள் இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் திருட்டுச் சம்பவங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
Tags:    

Similar News