செய்திகள்

அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்

Published On 2018-12-19 10:54 GMT   |   Update On 2018-12-19 10:54 GMT
அந்தியூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் அடுத்த மூலையூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44).விவசாயி.

வனப்பகுதியையொட்டி உள்ள இவர் தன் வீட்டு முன் வாழைகள் மரங்கள் பயிரிட்டுள்ளார். மேலும் அருகே இவருக்கு சொந்தமான 2½ ஏக்கர் தோட்டமும் உள்ளது. தோட்டத்தில் 10 மாடுகளை வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மாடுகளை கட்டி விட்டு மாடுகளுக்கு செடி- கொடி, தழைகளை போட்டு செல்வார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறி வந்தனர்.

இதற்கிடையே அந்த யானை நேற்று இரவும் ஊருக்குள் புகுந்தது.

விவசாயி செல்வராஜ் வீட்டு முன் உள்ள வாழைகளை தின்றது. பிறகு தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு மாடுகளுக்கு தீனியாக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் கபாளீகரம் செய்தது. பிறகு அங்கிருந்து காட்டுக்குள் புகுந்தது.

இன்று காலை இதை கண்ட செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவரும் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் மீண்டும் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து ஊருக்குள் புகும் யானையை வர விடாமல் தடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News