செய்திகள்

தேனி அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் பைக் திருட்டால் பொதுமக்கள் பீதி

Published On 2018-12-15 12:13 GMT   |   Update On 2018-12-15 12:13 GMT
தேனி அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் பைக் திருட்டால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

தேனி:

தேனி மதுரை சாலையில் க.விலக்கு பகுதியில் நவீன வசதிகளுடன் தரம் வாய்ந்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டது. உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இது மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். எனவே தினசரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். ஆனால் போதிய பாதுகாப்பு இல்லாததால் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்கள் தொடர்ந்து திருடு போகின்றன. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் ஒருவித பீதியுடனேயே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

இங்கு நிறுத்தப்படும் வாகனங்களை ஒரு கும்பல் தொடர்ந்து திருடி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வம் (வயது 37). இவர் தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க மோட்டார் சைக்கிளில் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரியில் நிரந்தரமாக போலீசாரை நியமித்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News