புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி: கணவன் - மனைவிக்கு வலைவீச்சு
புதுச்சேரி:
கோரிமேடு ராம்நகரை சேர்ந்த சூரியகுமார். இவரது மனைவி உஷாராணி (வயது 45) ஜிப்மர் ஊழியர். கணவன்-மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
இவர்களிடம் புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சாமிஜோசப் (60) என்பவர் 3 சீட்டுகள் போட்டிருந்தார். மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 3 சீட்டுக்கு பணம் கட்டி வந்தார்.
சீட்டு காலம் முடிந்ததும் சாமிஜோசப் தான் செலுத்திய சீட்டுக்கான பணம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்தை கேட்டார். அதற்கு உஷா ராணியும், சூரியகுமாரும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
பலமுறை நேரில் சென்று கேட்டும் அவர் பணத்தை கொடுக்காததால் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதையடுத்து சாமிஜோசப் புதுவை கோர்ட்டில் முறையிட்டார். இதை விசாரித்த நீதிபதி இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
கோர்ட்டு உத்தரவின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.