மெழுகுவர்த்தி தீ உடையில் பற்றியதால் 8 வயது சிறுமி உடல் கருகி பலி
புதுச்சேரி:
மேயிலாடுதுறை நத்தம் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது மனைவி ஷீலாமேரி. இவர்களது மகள் அனுஷ்கா (வயது8) இந்த சிறுமி காரைக்கால் திருநள்ளாறு தென்னங்குடி பகுதியில் உள்ள உறவினர் அருண் முரளி வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று அனுஷ்கா அங்குள்ள தேவாலயத்தில் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஏற்றி வைத்திருந்த மெழுகுவர்த்தி தீ அனுஷ்காவின் உடையில் பற்றிக்கொண்டது. தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் அனுஷ்கா அலறினார்.
உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அனுஷ்காவை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று இரவு அனுஷ்கா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.