செய்திகள்
கோவையில் ரோட்டோர கடையில் மாமூல் வாங்கும் போலீஸ்காரர்

கோவையில் போலீஸ்காரர் மாமூல் வாங்கும் வீடியோவால் பரபரப்பு- விசாரணை நடத்த உத்தரவு

Published On 2018-12-07 10:51 GMT   |   Update On 2018-12-07 10:51 GMT
கோவையில் ரோட்டோர கடைகளில் போலீஸ்காரர் ஒருவர் மாமூல் வாங்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை:

கோவையில் ஏராளமான இடங்களில் ரோட்டோர கடைகள் உள்ளது. இந்த கடைகளில் ரோந்து செல்லும் போலீசார் மாமூல் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் ரோட்டோர கடைகளில் போலீஸ்காரர் ஒருவர் மாமூல் வாங்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சைரன் ரோந்து மோட்டார் சைக்கிளில் சீருடையில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் ரோட்டோர இளநீர் கடைக்காரரிடம் மாமூல் கேட்கிறார். அவருக்கு இளநீர் கடைக்காரர் பணத்தை எடுத்து எண்ணி மறைவாக கொடுக்கிறார்.

அதனை போலீஸ்காரர் கைநீட்டி வாங்கி தனது கைக்குள் மறைத்து வைத்து கொண்டு பேசுவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. இவை அனைத்தும் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த வீடியோ ரேஸ் கோர்ஸ்- சுங்கம் சாலையில் எடுக்கப்பட்டு உள்ளது.

இளநீர் கடைக்கு சென்ற பொதுமக்கள் சிலர் போலீஸ்காரரின் வெளிப்படை மாமூலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

இந்த வீடியோ காட்சியை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளநீர் கடைக்காரரிடம் மாமூல் வசூலித்தது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸ்காரராக பணியாற்றி வரும் விஜய் ஆனந்த் என்பது தெரிய வந்தது. அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இது குறித்து துணை போலீஸ் கமி‌ஷனர் பாலாஜி சரவணன் கூறும் போது, போலீஸ்காரரிடம் மாமூல் வாங்கும் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
Tags:    

Similar News