செய்திகள்

திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

Published On 2018-12-07 10:46 GMT   |   Update On 2018-12-07 10:46 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நீலாம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரேணுகா (வயது35). இவர் நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த அபி (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்றார்.

மோட்டார் சைக்கிளை அபி ஓட்டினார். திண்டிவனத்தை அடுத்த கூச்சி கொளத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே மரக்கட்டை ஒன்று கிடந்தது.

அதை கவனிக்காத அபி அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அந்த மரக்கட்டையில் மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபி மற்றும் ரேணுகா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ரேணுகா பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து ஒலக்கூர் போலீசில் புகார் செய்யபட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News