வில்லியனூரில் கூட்டுறவு நூற்பாலை ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
வில்லியனூர் வசந்தம்நகர் பாரதியார் தெருவை கிருஷ்ணமூர்த்தி, (வயது55). இவர் திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த 9 மாதங்களாக கூட்டுறவு நூற்பாலை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் கிருஷ்ணமூர்த்தி குடும்பம் நடத்த முடியாமல் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அன்றாட செலவுக்குகூட பணம் இல்லாமல் திண்டாடி வந்தார். இதனால் விரக்தியில் இருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கெள்ள முடிவு செய்தார். நேற்று மனைவி பிரேமா மற்றும் மகன்-மகள் வெளியே சென்றிருந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பிரேமா கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.