செய்திகள்

பரமத்தி வேலூரில் கார் மோதி லாரி கிளீனர் பலி - வியாபாரி உள்பட 2 பேர் படுகாயம்

Published On 2018-11-28 18:12 GMT   |   Update On 2018-11-28 18:12 GMT
பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற லாரி கிளீனர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரமத்திவேலூர்:

பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற லாரி கிளீனர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கார் கவிழ்ந்ததில் வியாபாரி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 54), லாரி கிளீனர். இவர் நேற்று கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் பிரிவு சாலை அருகே நடந்து சாலையை கடக்க முயன்றார்.

அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற கார் ரவிக்குமார் மீது மோதியது. இதில் ரவிக்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்தில் கார் சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் காரில் வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (51), மாதேஸ்வரன் (59) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். 2 பேரும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் வந்த நெடுஞ்செழியன் உர வியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரம் சம்பந்தமாக நாமக்கல் வந்த போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் ரவிக்குமாரின் உடலை மீட்டு பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News