ராமநாதபுரம் அருகே 148 மது பாட்டில்கள் பறிமுதல் - 2 வாலிபர்கள் கைது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா தலைமையில் மது விலக்கு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மீலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப் பத்தை பயன்படுத்தி பலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள தெற்கூர் பகுதியில் மதுவிலக்கு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரனாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 148 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மது பாட்டிகளை கடத்தி வந்தது தெற்கூரை சேர்ந்த மூர்த்தி மகன் பிரபாகரன் (வயது 29), முனியாண்டி மகன் பூசைத்துரை (30) என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.