கோவை அருகே நேபாள சிறுமி மாயம்- கடத்தப்பட்டாரா? போலீஸ் விசாரணை
சூலூர்:
கோவை அருகே உள்ள வாகராயன் பாளையத்தில் வசித்து வருபவர் நரேஷ் (35). அங்குள்ள கியாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் நேபாளம் ஆகும். கடந்த 20 வருடங்களாக இங்கு தங்கி உள்ளார்.
நரேஷ் மனைவி கீதா. இவர்களது மகள் சுஜ்மிதா (10). நரேசின் உறவினர் தினேஷ் ராசி பாளையத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு சிறுமி சுஜ்மிதா செல்ல வேண்டும் என தனது தந்தை நரேசிடம் தெரிவித்தார். ராசிபாளையத்திற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி சிறுமியை ராசிபாளையத்திற்கு நரேஷ் ஏற்றி விட்டார்.
ஆனால் சிறுமி உறவினர் வீட்டுக்கு செல்லவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிய போதும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து நரேஷ் சூலூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகிறார்கள். சிறுமியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்றவர் கடத்தி சென்றாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.