செய்திகள்

ராசிபுரத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு அ.தி.மு.க. பிரமுகர் பலி

Published On 2018-11-04 18:22 GMT   |   Update On 2018-11-04 18:22 GMT
பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக ராசிபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் இறந்தார்.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வி.ஓ.சி காலனியில் வசித்து வருபவர் விஜி என்ற விஜயரங்கன்(வயது49). இவர் ராசிபுரம் நகர அ.தி.மு.க.வில் 7-வது வார்டு மேலவை பிரதிநிதியாகவும், நகராட்சியில் சுங்க வசூல் ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார். அதேபோல் டாஸ்மாக் மதுபான பார் எடுத்து நடத்தி வந்ததோடு, பயணிகள் ஆட்டோவை சொந்தமாக வைத்திருந்தார்.

இவருக்கு கடந்த 10 நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர், ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் பாதிப்பு குறையவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஜி, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஜிக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறி கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் விஜிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி விஜி இறந்தார்.

பன்றிக்காய்ச்சலால் இறந்த விஜிக்கு, மீனாகுமாரி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் ராசிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News