ராமநாதபுரத்தில் ஆம்னி பஸ்-வேனில் மது கடத்தல் - 5 பேர் கைது
ராமநாதபுரம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் பல்வேறு பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் சோதனை சாவடியில் கூடுதல் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து வந்த தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது பஸ்சில் 25 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பஸ்சுடன் அதனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சீனிவாசன் (வயது40) மற்றும் நாகூரை சேர்ந்த கிளீனரை கைது செய்தனர்.
இதேபோல் பாண்டிச்சேரியில் இருந்து நெல்லை மாவட்டம் சுரண்டை நோக்கி சென்ற சரக்கு வேனையும் போலீசார் சோதனையிட்டனர். அதில் 15 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
அதனையும், வேனையும் பறிமுதல் செய்த போலீசார் வேனில் வந்த பேச்சிமுத்து (20), முருகன் (30), தென்காசி விவேகானந்தன்(22) ஆகியோரை கைது செய்தனர்.
மது கடத்தல் குறித்து மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.