செய்திகள்

அஞ்சுகிராமம் பஸ் நிலையத்தில் டிரைவர் கொலையில் வாலிபர் கைது- மேலும் 2 பேர் தலைமறைவு

Published On 2018-11-01 11:56 GMT   |   Update On 2018-11-01 11:56 GMT
அஞ்சுகிராமம் அருகே உள்ள பஸ் நிலையத்தில் டிரைவர் கொலையில் வாலிபரை கைது செய்த போலீசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 35). திருமணம் ஆகாதவர். இவர் மினி டெம்போவில் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தார்.

நேற்று மாலை சுயம்புலிங்கம் அஞ்சுகிராமம் பஸ் நிலையம் அருகே உள்ள சிதம்பரநகர் பகுதியில் டெம்போவை நிறுத்தி அந்த பகுதியில் தண்ணீர் கேன்களை இறக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (30) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். மற்ற வாகனங்கள் செல்ல முடியாதவாறு மினி டெம்போவை ரோட்டில் நிறுத்தி வைத்திருந்ததாகச் சொல்லி சுயம்புலிங்கத்திடம் ஆனந்த் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றி 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக சுயம்புலிங்கம், அஞ்சுகிராமம் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். போலீசார் ஆனந்த்தை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து அவர் தலைமறைவாகி இருந்தார்.

பின்னர் சுயம்புலிங்கம், அந்த பகுதியில் நிறுத்தியிருந்த தனது டெம்போவை எடுப்பதற்காக பஸ்நிலையம் வழியாக நடந்து சென்றார். அப்போது ஆனந்த் தனது நண்பர்கள் விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், சிவராமபுரத்தைச் சேர்ந்த சரத்குமார் (22) ஆகியோருடன் அங்கு வந்தார்.

அவர்கள் சுயம்பு லிங்கத்துடன் மீண்டும் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுயம்புலிங்கத்தை சரமாரியாக குத்தினார். இதில் சுயம்புலிங்கம் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுயம்புலிங்கம் இறந்தார்.

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் ஆனந்த், சிவகுமார், சரத்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சரத்குமார் கைது செய்யப்பட்டார். மற்ற 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். தலை மறைவான ஆனந்த் மீது அஞ்சு கிராமம், பழவூர், கூடங்குளம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

இதற்கிடையே முக்கிய குற்றவாளியான ஆனந்த்தை கைது செய்யக் கோரி சுயம்புலிங்கத்தின் ஊரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஆட்டோ டிரைவர்களும் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் இன்று திரண்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆனந்த்தை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News