செய்திகள்

தஞ்சையில் ஸ்டூடியோ கடையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-10-31 10:48 GMT   |   Update On 2018-10-31 10:48 GMT
கடன் பிரச்சினை காரணமாக ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை செய்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் தஞ்சை பழைய பஸ் நிலைய பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்தார்.

ரமேஷ், தனது ஸ்டூடியோ தொழில் அபிவிருத்திக்காக சிலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரமேசுக்கு தொழில் சரிவர நடைபெறவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு ரமேசுக்கு நெருக்கடி கொடுத்தனர். கடன் தொல்லையால் ரமேஷ் மனமுடைந்து வந்தார்.

இந்த நிலையில் ரமேஷ், கடந்த 3 நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவரது தாய், இன்று காலை ரமேசை தேடி ஸ்டூடியோவுக்கு வந்தார்.

அங்கு போட்டோ எடுக்கும் அறையில் உள்ள மின்விசிறியில் ரமேஷ் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதை பார்த்து அவரது தாய் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுபற்றி தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ரமேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தூக்க மாத்திரைகளையும் அவர் சாப்பிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட ரமேசுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Tags:    

Similar News