செய்திகள்
புதுவை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
புதுவை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி மீனாகுமாரி (வயது 35). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீனாகுமாரி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் நேற்று முன்தினம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதற்கிடையே அவருக்கு நேற்று மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மீனாகுமாரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே மீனாகுமாரி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ குழுவினர் அவரது உடலை ஆய்வு செய்து வருகிறார்கள்.